அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளால் பாரசீக வளைகுடாவில் பதற்றமான நிலை நிலவி வருகிறது. இதனால் கச்சா எண்ணை விலை உயரும் அபாயம் உள்ளது.
ஈரானுடன் ஏற்படுத்திக் கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு பிரச்னைகள் நடந்து வருகிறது. மோதல் போக்குகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இப்படிப்பட்ட மோதலுக்கு மேலும் வலுவூட்டும் வகையில பாரசீக வளைகுடாவில் ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க போர்க் கப்பல் மற்றும் அதில் இருந்த ராணுவ வீரர்களை அச்சுறுத்தும் வகையில் பறந்த ஈரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.
இதற்கு முன்பு அமெரிக்காவின் ஆள் இல்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட செயல்களால் பாரசீக வளைகுடா பகுதியில் போர் பதற்றம் நிலவுகிறது.
சர்வதேச அளவில் வளைகுடா நாடுகளில் பெறப்படும் கச்சா எண்ணெயை ஏற்றிக் கொண்டு வரும் கப்பல்களில் 20 சதவீதம் இந்த பாரசீக வளைகுடா பகுதி வழியாக தான் செல்கின்றன. இங்கு பதட்டம் நிலவுவதால் எண்ணெய் கப்பல்களை வர்த்தக நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.